தமிழ்நாடு

"ஓய்வூதியம் கொடுக்க முடியவில்லை என்றால் பேருந்தை கொடுங்கள்" உயர்நீதிமன்றத்தில் வழக்கு

webteam

ஓய்வூதியம் வழங்க முடியவில்லை என்றால் புதிய பேருந்தை வழங்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் போக்குவரத்துக்கழகம் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றியவர்கள் ராதாகிருஷ்ணன், பக்தவத்சலம். இவர்கள் இருவரும் ஓய்வுப் பெற்றும் இன்னும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. ராதாகிருஷ்ணனுக்கு ரூ.18 லட்சத்து 21 ஆயிரம் ஓய்வூதியமும், பக்தவத்சலத்துக்கு ரூ.9 லட்சத்து 74 ஆயிரம் ஓய்வூதியமும் அரசு கொடுக்க வேண்டும். ஆனால் தங்களுக்கு ஓய்வூதியப்பலன் இன்னும் கிடைக்கவில்லை எனக்கூறி இருவரும் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அதில் தாங்கள் ஓய்வுப் பெற்றும் இன்னும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்றும், அதனால் ஓய்வூதியப்பலன்களை 18% வட்டியோடு தங்களுக்கு கிடைக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அல்லது ஓய்வூதியத்துக்கு பதிலாக தமிழக அரசின் புதிய பேருந்து ஒன்றை தங்களுக்கு தர வேண்டும் என தெரிவித்திருந்தனர். மேலும் ஓய்வுப்பெறும் ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டுமென பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்தவழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஓய்வுப் பெற்ற ஊழியர்களின் வழக்கில் தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் 8 வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.