தமிழ்நாடு

திருச்சி: மறுவாழ்வு மையத்திற்கு உடல் நலக்குறைவுடன் வந்த இரண்டு யானைகள்

Veeramani

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே சனமங்கலம் ஊராட்சியை சேர்ந்த எம்.ஆர்.பாளையம் பகுதியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு பொள்ளாச்சி யிலிருந்து ரோகினி என்ற 25 வயது யானை மற்றும் ராஜபாளையம் பகுதியிலிருந்து இந்திரா என்ற 60 வயதான இரு யானைகளும் உடல் நலக்குறைவுடன் வந்துள்ளது, இந்த இரு யானைகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், வனத்துறையினர் பராமரித்தும் வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியாரால் வளர்க்கப்பட்ட ரோகினி என்ற 25 வயதான பெண் யானை. கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி வனத்துறையால் மீட்கப்பட்டு, கோவை மாவட்டம் , டாப்சிலிப் கோழிகுத்தியிலுள்ள யானைகள் முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த பெண் யானை 400 கிலோவுக்கு மேல் எடை குறைந்து உடல் மெலிந்தது. இதனால் கடந்த சில மாதங்களாக யானை ரோகிணி தொடர்ந்து கண்காணித்து வரப்பட்டது.

இந்நிலையில் தனியாரிடம் இருந்தபோது ஒற்றை கவனிப்பில் வளர்ந்து வந்த அந்த யானை,  பல் வலி காரணமாக சாப்பிட  முடியாமலும் சிரமப்பட்டுள்ளது. அதே போல விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியிலிருந்து இந்திரா என்ற 60 வயதான பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு யானைகளும் யானைகள் முகாமிலிருந்து திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வந்தனர்.  அங்கு அதிகாரிகள், மருத்துவக்குழுவினர்  யானையின் உடல்நலத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஏற்கெனவே மலாத்தி, சந்தியா, ஜெயந்தி, கோமதி, ஜமிலா , இந்து என்ற 6 யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த இரண்டு யானைகள் வந்துள்ளதால் மொத்தம் 8 யானைகளை திருச்சி மாவட்ட வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்