தமிழ்நாடு

விநாயகர் சிலை செய்ய களிமண் எடுக்கச் சென்ற 2 சிறுவர்கள் கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு

kaleelrahman

விளாத்திகுளம் அருகே விநாயகர் சிலை செய்ய களிமண் எடுக்கச் சென்ற 2 சிறுவர்கள் கண்மாய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மகன் ஜெய தனுஷ்குமார் (5) மற்றும் ரெங்கமூர்த்தி என்பவரின் மகன் விஷ்வகுரு (6) ஆகிய இருவரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண்ணில் விநாயகர் சிலை செய்து வழிபடுவதற்காக பொது கண்மாயில் களிமண் எடுப்பதற்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு சிறுவர்கள் குளித்து கொண்டு இருப்பதை கண்ட 2 சிறுவர்களும் கண்மாயில் குளித்துள்ளனர். அப்போது கண்மாயில் இருந்த ஆழமான குழியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து கிராம மக்கள் சங்கரலிங்கபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் உயிரிழந்த இரு சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.