பள்ளி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(25). இவர் அப்பகுதியில் உள்ள 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பழகி வந்துள்ளார். இம்மாணவியின் தந்தை மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் சென்றிருந்தபோது சந்தோஷ் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அத்துடன் அதனை மாணவிக்கே தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வைத்து கொண்டு தொடர்ந்து மாணவியை அச்சுறுத்தி வந்துள்ளார்.
மேலும் அவரது நண்பரான கண்ணன்(36) என்பவருக்கும் அந்த ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார். இதனையடுத்து கண்ணன் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளார். அப்போது மாணவியின் பெற்றோர் வந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இச்சம்பவம் குறித்து சைல்டு ஹெல்ப் லைன் நம்பருக்கு போன் செய்துள்ளனர். இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சந்தோஷ், கண்ணன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.