குடவாசல் அருகே ஆற்றில் மூழ்கி அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கண்டரமிணிக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி கவிதா மகள் திவ்யா மகன் ஸ்ரீராம் ஆகியோர் கண்டரமாணிக்கம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் அக்கா திவ்யா, தம்பி ஸ்ரீராம் ஆகிய இருவரும் அருகில் உள்ள திருமலைராஜன் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஆற்றில் மூழ்கி விட்டனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் நீண்ட நேரம் போராடி இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே குழந்தைகள் உயிரிழந்த தகவல் அறிந்த தாயார் கவிதா தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் குறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.