No Delimitation To Fair Delimitation TN Govt
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை | 8 நாளில் மாறிய விஜயின் முடிவு.. அமித் ஷா முன்னிலையில் அதிர்ச்சி!!

தொகுதி மறுவரையரை குறித்த விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாடு ஒரே நாளில் மாறியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

மத்திய அரசு 70-களில் கொண்டுவந்த மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டங்களை தென் மாநிலங்கள் தீவிரமாக பின்பற்றிய நிலையில், அதனை வட இந்திய மாநிலங்கள் சரிவர பின்பற்றவில்லை. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் வட இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது. ஆனால், தங்களின் தொகுதிகள் குறையும் என தென்மாநிலங்களில் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதா எதிர்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.

எனினும் தற்போது மீண்டும் அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் தான், கடந்த வாரம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும். உறுப்பினர்களின் விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து பெரும்பான்மை ஆதரவோடு அந்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.

CM Vijay Statement about delimitation

இந்த நிலையில், 31-ஆவது தென்மாநில முதல்வர்கள் மாநாடு மாமல்லபுரம் அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டிருந்தார். இதில் பேசிய தமிழ்நாடு முதல்வர் விஜய், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் போது, மாநிலங்களின் பிரதிநிதித்துவம் எந்தக் காரணத்தைக் கொண்டும் குறையாத வகையில் அதனைச் சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்றத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என அதாவது No Delimitation என தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என அதாவது Fair Delimitation என முதல்வர் விஜயின் பேச்சு மாறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை குறிப்பிட்டு திமுக, அமமுக ஆகிய கட்சிகள் தவெக அரசை விமர்சித்துள்ளன.