விஜய் அரசின் மீது இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது. அவருடைய அரசுக்கு 144 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரது அரசு தொடர்கிறது.
விஜயின் தவெக ஆட்சி மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதையடுத்து, ஆரம்பத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐ.யூ.எம்.எல்., மன்னார்குடி எம்.எல்.ஏ. ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த், பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பேசினர். இதில், அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தரப்பும் ஆதரவு தெரிவித்தது. இறுதியில், சட்டசபையின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூட சபாநயாகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார்.
சட்டசபை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்களை எழுந்து நிற்கவைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் டிவிஷனில் 30 எம்எல்ஏக்களும், 2-ஆவது டிவிஷனில் 42 எம்எல்ஏக்களும், 3-ஆவது டிவிஷனில் 46 எம்எல்ஏக்களும் 4-ஆவது டிவிஷனில் எஸ்.பி.வேலுமணி தரப்பு 25 அதிமுக எம்எல்ஏக்களும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். 5 மற்றும் 6-ஆவது டிவிஷன்களில் தவெக அரசை ஆதரிப்பதாக 144 பேர் கூறியதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றிபெற்றது. இதனால் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்கிறது. இந்த வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் விஜய், தனது கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அடுத்து, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ சபைக்கு வரவில்லை. அடுத்து சபாநாயகரின் ஒரு ஓட்டு கணக்கில் வராது. இந்த மூன்றும்போக மொத்த எண்ணிக்கை 231 ஆகும். இதிலும், 2 மதிமுக எம்.எல்.ஏக்கள் சபைக்கு வரவில்லை. மீதமுள்ள 229 எம்.எல்.ஏக்களில் வாக்கெடுப்பின்போது சபையில் இருந்தவர்கள் 171 பேர். இதில்தான் 144 பேர் ஆதரவு தெரிவித்தனர். 22 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். 5 பேர் நடுநிலை வகித்தனர். இவற்றில் பழனிசாமிக்கு ஆதரவாக 22 பேரும், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக 25 பேரும் உள்ளனர். எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவானோர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.