தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் இருந்து தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அவர் 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில், வரும் 27ஆம் தேதி விஜய், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாக தவெக தலைமை தெரிவித்திருந்தது. முன்னதாக இதே தேதிகளில் அவர் வடசென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளும் வகையில் பயணத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று, அக்டோபர் மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் அவர் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் பரப்புரை செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு, அதே தேதிகளில் விஜய், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகிவுள்ளது. மேலும், அதற்கான காவல் துறை அனுமதியைப் பெறுவது உள்ளிட்ட பணிகளை தவெக நிர்வாகிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.