கரூர் துயரம், சிபிஐ விசாரணை pt web
தமிழ்நாடு

கரூர் துயரச் சம்பவம்| சிபிஐ விசாரணையில் தவெக மாநில நிர்வாகிகள்!

கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு இன்று தவெக மாநில பொதுச் செயலாளர் என்.ஆனந்த், துணை செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் ஆஜர் ஆகியுள்ளனர்.

PT WEB

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே கூட்டநெரிசலுக்கு காரணம் என காவல்துறை தரப்பிலும், காவல்துறை முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை, காவல்துறையின் அறிவுறுத்தல் படியே நாங்கள் செயல்பட்டோம் என்று தவெக தரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

கரூர்

இந்தக் கரூர் துயரச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அமைத்தது. சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக சார்பில் தாக்கல் செய்த மனுவிற்கு, சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட புலனாய்வுக் குழுவையும் நியமித்து உத்தரவிட்டனர். இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல் கரூரில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த துயரச் சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்தில் உள்ள வணிகர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், துயர சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடைபெற்றுள்ளது.

மதியழகன், நிர்மல்குமார், என். ஆனந்த்

இந்நிலையில், இந்த கரூர் சம்பவம்  நடைபெற்ற போது கரூர் நகர காவல் நிலையத்தில் தவெக மாநில பொதுச் செயலாளர் ஆனந்த்  துணை பொதுச்  செயலாளர் நிர்மல் குமார்,  கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டவர்கள் மீது நகர காவல் நிலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையிலேயே சிபிஐ போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்தவகையில் இன்று, தாவெகவின் மாநில பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதாவ் அர்ஜூன், தவெம துணை செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உட்பட ஐந்து பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.