இரவில் நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்த தவெக நிர்வாகி அருண்ராஜ் web
தமிழ்நாடு

தவெக பேனர் அகற்றிய விவகாரம்| அதிகாரத் திமிரா? தோல்வி பயமா?.. தவெக நிர்வாகி அருண்ராஜ் பதிவு!

திருச்செங்கோட்டில் தவெகவினர் அனுமதியின்றி பேனர் வைத்ததாக நகராட்சி ஊழியர்கள் அகற்றிய நிலையில், கட்சியினருடன் வந்து தவெக நிர்வாகி அருண்ராஜ் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது..

Rishan Vengai

திருச்செங்கோடு தொகுதியில் தவெக பேனர் அகற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண்ராஜ், அதிகார துஷ்பிரயோகத்தால் பேனர் அகற்றப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் கண்டித்துள்ளார். மக்களின் ஆதரவோடு தடைகளை உடைத்தெறிவோம் என அவர் உறுதியளித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் போட்டியிட போவதாக அவரது கட்சியினர் கூறி வருகின்றனர்.

திருச்செங்கோடு தொகுதியின், அதிகாரப்பூர்வ வேட்பாளராக அருண்ராஜ் அறிவிக்கப்படவில்லை என்றாலும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர களப் பணியில் அருண்ராஜ் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தசூழலில் தான் நாளை திருச்செங்கோட்டின் புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவிலின் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு வரும் பக்தர்களை வரவேற்கும் விதமாக ஓங்காளியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இந்த பேனரில், தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் ஆகியோர் உருவபடத்துடன் "புதிய தேர் வெள்ளோட்டம் மாற்றத்திற்கான முன்னோட்டம்" என்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்தன..

இதனால் நகராட்சி ஊழியர்கள் அப்பேனரை அகற்றியதாக சொல்லப்படுகிறது. அதைக்கேள்விபட்டு இரவில் கட்சியினருடன் சம்பவ இடத்திற்கு வந்த அருண்ராஜ் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் தவெக பேனர் வைக்கப்பட்டது..

அதிகாரத் திமிரா? தோல்வி பயமா?

இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், ”அதிகாரத் திமிரா? தோல்வி பயமா?

திருச்செங்கோட்டில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, முறைப்படி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வரவேற்பு பதாகைகளை (Banners), எந்த முன்னறிவிப்பும் இன்றி, அதிகார பலத்தைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர்.

தகவல் அறிந்து நேரில் சென்று தடுத்து நிறுத்தினேன். "எந்த விதியின் அடிப்படையில் அகற்றுகிறீர்கள்?" என்று காவல்துறையிடம் கேட்டால் பதிலே இல்லை! காரணமே இல்லாமல் எங்கள் பதாகைகளை அகற்றுவது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி மற்றும் அதிகார துஷ்பிரயோகம்!

இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை!

எத்தனை தடைகள் போட்டாலும், மக்களின் ஆதரவோடு அதை உடைத்தெறிவோம்!

நாங்கள் விதை... புதைக்க நினைத்தால் முளைப்போம்” என பதிவிட்டுள்ளார்.