கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை மிரட்டியதாக மேலும் ஒரு தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்ந்து பேசுபொருளாக இருந்துவருகிறது.
இந்தசூழலில் கரூர் துயரச் சம்பவம் சார்ந்து தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலின்போது, காயமடைந்தவர்களை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை மிரட்டியதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலர் கைது செய்யப்பட்டார்.
கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ்கள் சென்றுள்ளன. அப்போது, ஆம்புலன்ஸை வழிமறித்துச் சேதப்படுத்தியதுடன், ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தவெக நிர்வாகி வெங்கடேஷ் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வெங்கடேஷை காவல் துறையினர் கைது செய்தனர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.