திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அரசியல் பேரிடர்க் காலத்திலும் திமுக, தமிழ்நாட்டை காப்பாற்றும் என கூறியதை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழக ஐடி பிரிவு X தளத்தில் கடும் பதிலடி அளித்துள்ளது. அண்ணா உருவாக்கிய கட்சியை ஒரு குடும்பம் கைப்பற்றியதே உண்மையான பேரிடர் காலம் என்றும், எம்.ஜி.ஆருக்கு நன்றி இல்லாமல் நடந்ததே தமிழக அரசியலின் வீழ்ச்சி என குற்றம் சாட்டியுள்ளது.
செய்தியாளர் - M.மீரா
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், இப்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பேரிடர்க் காலத்திலும், தமிழ்நாட்டை நம்முடைய தலைவரும் திமுகவும் காப்பார்கள் என்று பேசியிருந்தார். இந்த கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் தங்களது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிலடி கொடுத்துள்ளது.
அந்தப் பதிவில் அண்ணா உருவாக்கிய கட்சியை அவரது குடும்பத்தைக்கூட ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில்கூட இடம் பெற்றிராத ஒரு குடும்பம் மட்டுமே கைப்பற்றியதே, அதுதான் தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட பேரிடர்க் காலம். அண்ணாவிற்குப் பிறகு கலைஞரை முதல்வராகவும் தலைவராகவும் ஆக்கப் பேருதவியாக இருந்த எம்.ஜி.ஆரை நன்றி விசுவாசமின்றித் தூக்கி வீசிய ஒரு குடும்பத்தால் உருவானதுதான் தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட பேரிடர்க் காலம்.
திருட்டு மாடல் திமுகவின் ஆட்சிக் காலம் முழுவதும் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஏற்பட்டதுதான் பேரிடர்க் காலம். தீயசக்தி திமுகவிற்கான பேரிடர்க் காலம்: ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொள்ளை அடித்த தீயசக்தி திமுகவிற்கு, அரசியலில் கொள்ளை அடிக்க இயலாத நிலையை உண்டாக்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் வருகைதான் திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம்.
லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்கி வரும் எங்கள் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சிதான் தீயசக்தி திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம். அடித்த கொள்ளையால் அகப்பட்டு, தலைமறைவாகவும் வெளிநாட்டு மருத்துவமனைகளிலும் பதுங்கித் திரியும் திமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கும்தான் இது அரசியல் பேரிடர்க் காலம்.
திமுக முன்னாள் அமைச்சர்கள் சிக்கினால், முக்கியக் குடும்பமும் சிக்கி, திக்கித் திணறுமோ என்பதுதான் தீயசக்தி திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம். இப்படி தீயசக்தி திமுகவால் தமிழக அரசியலுக்கும் தமிழக மக்களுக்கும் பேரிடர்க் காலம் ஏற்பட்டதும் உண்மை. ஆட்சியில் இருந்தபோது அடித்த கொள்ளைகளால் திமுகவிற்கும் இப்போது பேரிடர்க் காலம் ஏற்பட்டு இருக்கிறது என்பதும் உண்மை.
ஆனால், எங்கள் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சியின் காரணமாக, தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது. அந்த வகையில், தீதும் சூதும் நிறைந்த திமுகவிடம் இருந்து தப்பிய தமிழக மக்களுக்கு இது அழகிய தென்றல் காலம். அகமகிழும் பேரின்பக் காலம். ஆனால், தீயசக்தி திமுகவிற்கு இது பேரிடர்க் காலம்தான். அதில் சந்தேகமே இல்லை. எப்படியோ இப்படி உளறியாவது உண்மையை ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளது.