விஜய், நயினார் நாகேந்திரன் web
தமிழ்நாடு

பாஜக - தவெக கூட்டணியா.? அடுத்தடுத்து பரவும் தகவல்கள்.. டெல்லி புறப்பட்டார் விஜய்.!

தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக கூறப்படும் நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் பாஜக மற்றும் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. விஜய், சிபிஐ விசாரணைக்காக டெல்லி புறப்பட்டுள்ள நிலையில், பாஜக-தவெக கூட்டணி வதந்திகள் பரவுகின்றன. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கும் நிலையில், ஆட்சியைத் தக்க வைக்கும் நோக்கில் திமுக கூட்டணி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அதிமுக கூட்டணி, முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகம், தனித்துக் களம் காணும் நாம் தமிழர் என அரசியல் களம் தீவிரமடைந்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என அரசியல் கட்சி விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொண்டால் தங்களால் ஆட்சியை எளிதாக கைப்பற்ற முடியும் என்ற நோக்கத்தோடு, தவெகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி பேசுபொருளாக மாறிவருகிறது.

விஜய், சிபிஐ

அந்தவகையில் தான், கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை, ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான தணிக்கை தொடர்ந்து தள்ளிப்போவது உள்ளிட்ட நெருக்கடிகளை விஜய்க்கு பாஜக உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், தவெக நிர்வாகிகள் தரப்பில் இருந்து, தமிழக மக்களை மடைமாற்றம் செய்யும் நோக்கிலேயே பாஜகவுடன் தவெக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதாக வதந்தி பரப்புகின்றனர் எனத்தெரிவிக்கப்பட்டிருக்கிறது என கூறுகின்றனர்.

இதற்கிடையில் தான், கரூர் துயரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், தற்போது தவெக தலைவர் விஜய் சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் டெல்லி சென்றிருக்கிறார்.

ஏற்கனவே, ஜனவரி 12-ம் தேதி மற்றும் ஜனவரி 19-ம் தேதி ஆகிய நாட்களில் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். தொடர்ந்து 3 ஆம் கட்ட விசாரணக்காக மார்ச் 10-ஆம் தேதி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அன்று தவெக சார்பில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறவிருந்ததால் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், 5 நாட்களுக்குப் பிறகு, நாளை சிபிஐ விசாரணை நடக்கவிருக்கிறது. இதில், கலந்துகொள்வதற்காக இன்று மாலையே தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்

தவெகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படும் நிலையில், விஜயின் இந்த டெல்லிப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்த வழக்கின் விசாரணைக்காக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மார்ச் - 17ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவுள்ளார்.