தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தர பூட்டு: சந்தீப் நந்தூரி

webteam

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாகவும், இனிமேல் திறக்கப்படாது என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்ற தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அதற்கு சீல் வைத்தார். அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக நோட்டீஸும், ஆலையின் கதவில் ஒட்டப்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் பேசிய ஆட்சியர் சந்தீப், “தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆலையை சீல் வைத்து மூடியுள்ளோம். நிரந்தரமாக ஆலை மூடப்பட்டுள்ளது. இனிமேல் ஆலைக்குள் எந்தவித உற்பத்தியும் நடைபெறாது. ஏற்கனவே தண்ணீர், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் தேதி முதல் ஆலை செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் தான் இனி ஆலை இயங்க முடியாத படி நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. உள்ளே சில ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் அடுத்து என்ன செய்யவேண்டும் என நாங்கள் கூறுவோம். இனிமேல் தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.