தமிழ்நாடு

“தெலங்கானா என்கவுன்ட்டர் போன்ற நடவடிக்கைகள் தேவையாக உள்ளது”- டிடிவி தினகரன்

webteam

தெலங்கானா என்கவுன்ட்டர் போன்ற நடவடிக்கைகள் தேவையாக உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூரில் அமமுக நிர்வாகி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுதந்திரமான ஆணையம் என்று பேசி வருகிறார். அவர் ஒருவரை தூக்கி வைத்து பேசினாலே, அவர் பொய் சொல்கிறார் என்பதுதான் அர்த்தம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் தேதி என்பதை ஜாதகம் பார்த்து, ஜோசியம் பார்த்து முடிவு செய்துள்ளார்கள். தேர்தல் ஆணையர் வேறு இல்லை, தமிழக முதல்வர் வேறு இல்லை.

நடந்து முடிந்த சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதிமுக பண பலத்தை வைத்து வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஆள்பவர்கள் இவர்களை கைவிட்டால் நிச்சயம் இந்த ஆட்சி நீடிக்காது” என்றார்.

இந்தியாவில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்தபோது, “தெலங்கானாவில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது என்கவுன்ட்டர் நடத்தப்பட்டுள்ளது. இதை பலரும் சட்டரீதியாக மேற்கொண்டு, சட்டத்தின் முன் அவர்களை நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என சொல்கிறார்கள்.  சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவது மூலம் இந்தக் குற்றங்கள் குறைந்தபாடில்லை. காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்தது தவறு என்றாலும், இதுபோன்ற சம்பவங்களுக்கு இந்த மாதிரியான நடவடிக்கைகள் தேவையாக இருக்கிறது.  ஆக இது போன்ற தண்டனைகள் கொடுப்பதன் மூலம், இனிவரும் காலங்களில் பயம் ஏற்படும்” என்றார்.