டிடிவி தினகரன் pt web
தமிழ்நாடு

என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் இணைந்தது ஏன்?.. பின்னணி குறித்து விளக்கும் டிடிவி தினகரன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பின் பேரிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில், தமிழக அரசியல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவிவருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் மதிமுக உள்ளிட்ட இன்னும் சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம், அதிமுக தலைமையில் பாஜக, அமமுக, அன்புமணி தரப்பு பாமக, தமாகா உள்ளிட்ட மேலும், சில கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளன.

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளாராக ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, அக்கூட்டணியை விட்டு வெளியேறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொடர்ந்து, பொதுவெளிகளில் பழனிசாமியை விமர்சித்தும் வந்தார்.

பியூஷ் கோயல் - தினகரன்

இந்தநிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்து மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போது, அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவருவதற்காகவே இக்கூட்டணியில் இணைந்துள்ளேன் எனவும் எங்களிடம் இருப்பது பங்காளி சண்டை மட்டுமே எனவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். ஆனால், அன்று எடப்பாடி பழனிசாமி என்ற பெயரை உச்சரிக்காமல் கவனத்துடன் தவிர்த்திருந்தார்.

இதையடுத்து, ஜனவரி 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற என்.டி.ஏ கூட்டணியில் பொதுக்கூட்ட விழாவில் பங்கேற்றார். அப்போது, அம்மேடையில், எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் சந்தித்துப் பேசிக்கொண்டனர். தொடர்ந்து, டிடிவி தினகரன் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், முழு மனதோடு எடப்பாடி கே. பழனிசாமியை ஏற்றுக் கொண்டு இக்கூட்டணிக்கு வந்துள்ளேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக அளித்திருக்கும் பேட்டியில், மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்கான பிண்ணனி குறித்து கூறியிருக்கிறார்.

அந்தப்பேட்டியில் டிடிவி தினகரன் பேசியிருப்பதாவது;

”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நான் விலகிய பிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என்னை தொடர்பு கொண்டு பேசினார். தொடர்ந்து, செப்டம்பர் 8 ஆம் தேதியே பாஜக மூத்த தலைவர்கள் என்னை என்.டி.ஏ கூட்டணியில் விலகியது குறித்து கேட்க அழைத்திருந்தார். நானும் செல்வதாகத்தான் இருந்தது. ஆனால், செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று, துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்ததால் அந்த, சந்திப்பு தள்ளிப்போனது. ஆனாலும், அடிக்கடி தொலைப்பேசியின் மூலம் அழைத்த தலைவர்கள், உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. அதை நாம் சரி செய்யலாம். ஆனால், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவது நம்முடைய கடமை எனவும் தெரிவித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இதைத்தொடர்ந்து, பிகார் தேர்தலுக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னை அழைத்து 2021 ஆகி விடக்கூடாது. நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார். அப்போது, நான் என்.டி.ஏ கூட்டணியில் இருப்பதற்கு எனக்கு பிரச்னை இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி சம்மதமா எனத் தெரியவில்லை எனத் தெரிவித்தேன். அப்போது, அமித் ஷா அவருடைய சம்மதத்திற்கு பிறகே உங்களை ஆழைத்துப் பேசுகிறேன் எனத் தெரிவித்தார். தொடர்ந்து, அவருக்கு சரி என்றால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்.டி.ஏ-வில் இணைகிறேன். ஆனால், என்னுடைய கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசிவிடுகிறேன் எனத் தெரிவித்து விட்டு வந்தேன். அதேபோல, நிர்வாகிகளும் பாஜகவுடனேயே கூட்டணி வைக்க விரும்பினர். இதையடுத்தே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருக்கிறேன்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.