டிடிவி தினகரன்  Pt web
தமிழ்நாடு

”எம்.எல்.ஏ-வை காணவில்லை; விஜய் குதிரை பேரம் நடத்துகிறார்” - டிடிவி தினகரன்!

அமமமுக மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை இன்று மாலையில் இருந்து காணவில்லை எனவும் தவெக தலைவர் விஜய் குதிரை பேரம் நடத்துவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து அமமுக 11 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், மன்னார்குடி தொகுதி மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அமமுக வேட்பாளர் காமராஜ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜாவை 1566 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். அதேசமயம், அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களை மட்டுமே பெற்று இத்தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. திமுக கூட்டணி 73 இடங்களை பெற்ற நிலையில், முதன் முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பெற்றிருக்கிறது.

விஜய்

தவெக வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கான 118 என்ற இடங்கள் கிடைக்காத சூழலில், விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை கோரியிருந்தது. அதேசமயம், அதிமுக திமுக கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதற்கு வலுசேர்க்கு விதமாக, புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டமும், திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் சென்னையிலும் ஒரே நாளில் நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில், மே-10 ஆம் தேதி வரை திமுக எம்.எல்.ஏ-க்கள் சென்னையிலேயே இருக்க அக்கட்சி தலைமையால் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்தசூழலில் தான், இன்று இடதுசாரி கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இதன்மூலம், தவெக பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்களே உள்ள நிலையில், விசிக முடிவைப் பொறுத்தும் தவெக ஆட்சி அமைக்கவிருக்கிறது. இந்தசூழலில், இன்று ஆளுநர் மாளிகைக்கு வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடப்பதாகவும், தங்கள் கட்சி எம்.எல்.ஏ-வை இன்று மாலை முதல் காணவில்லை எனவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

டிடிவி தினகரன் - காமராஜ்

இதுகுறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், கே. பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவரது ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக எனது எம்.எல்.ஏ காமராஜை நாங்க பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், இன்று மாலை அவரை தொடர்பு கொண்ட போது தொடர்புகொள்ள முடியவில்லை. போனை பிடுங்கி வைத்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. மக்கள் விஜய்க்கு 108 இடங்களில் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஆட்சி அமைக்கும் அளவிற்கு ஆதரவு கொடுக்கவில்லை. விஜய் தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு இருக்க முடியும். மன்னார்குடியில் தவெகவை எதிர்த்து எங்கள் எம்.எல்.ஏ. வெற்றி பெற்றிருக்கிறார். விஜய் குதிரை தூய சக்தி என சொல்லிவிட்டு, முதல் நாளே இப்படி குதிரை பேரத்தில் ஈடுபடுவது சரியானது இல்லை. இதுகுறித்து ஆளுநரிடம் புகாரளித்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.