தமிழ்நாடு

பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பை உடனே திரும்ப பெறுக : டிடிவி தினகரன்

JustinDurai
'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ''காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போல காட்டிக்கொண்டு வசனம் பேசுவதையும் , ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான (ஹைட்ரோ கார்பன் போன்ற) திட்டத்திற்கு கையெழுத்து போடுவதையும் தி.மு.க வாடிக்கையாக வைத்திருக்கிறது. அந்த வரிசையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இப்பிரச்னையில் கொண்டிருந்த நிலைப்பாட்டையே, முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.