தமிழ்நாடு

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 ஆண் குழந்தைகள் - சென்னை தம்பதிக்கு கிடைத்த ’ட்ரிபிள்’ சந்தோஷம்

Sinekadhara

ராஜபாளையத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த யோகேஷ் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யாழினி சென்னையில் ஐடி அலுவலக ஊழியர். கடந்த ஆண்டு யாழினி கருவுற்றிருந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது வயிற்றில் 3 கருக்கள் உருவாகி இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு யாழினியின் உடல்நிலை இல்லை எனவும், கருக்களை கலைத்து விடுமாறும் அங்குள்ள மருத்துவர்கள் யோகேஷுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

அந்த சமயத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்ததை செய்திகள் மூலம் அறிந்த தம்பதி, ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். மருத்துவர் ராஜாராம் அவர்களுக்கு தைரியம் கொடுத்து, தேவையான அறிவுரை வழங்கி உள்ளார். மாதந்தோறும் மருத்துவரின் அறிவுரையின்படி யாழினி மருந்துகள், உணவுகள் எடுத்துக் கொண்டதன்பேரில் இன்று அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் 3 ஆண் குழந்தைகள் நலமுடன் பிறந்துள்ளது.