செய்தியாளர்: வி.சார்லஸ்
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே உள்ள அழுந்தலைப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீட்டு உபயோகத்திற்காக ஆண்டுதோறும் மண்ணச்சநல்லூரில் உள்ள அரிசி ஆலையில் மொத்தமாக அரிசி மூட்டைகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மண்ணச்சநல்லூர் சென்ற 20 பெண்கள் அரிசி மூட்டைகளை வாங்கி டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
அப்போது, திருச்சி - சிதம்பரம் புதிய தேசிய நெடுஞ்சாலையில் இருதயபுரம் அருகே சென்றபோது பெண்கள் சென்ற டிராக்டர் மீது டாரஸ் லாரி மோதியுள்ளது. இந்த விபத்தில் அரிசி மூட்டையின் மேற்பகுதியில் அமர்ந்து வந்த சாந்தி, செல்வநாயகி, ராசாம்பாள் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.