தமிழ்நாடு

திருச்சி: மலைக்கோட்டையில் காதலர்களை நுழைய விடாமல் கலாட்டா செய்த மூவர் கைது

kaleelrahman

திருச்சியில் காதலர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டத்தின் அடையாளச் சின்னமாக விளங்கும் மலைக்கோட்டை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும், மத்தியில் தாயுமானவர் சாமி கோவிலும், மலைக் கோட்டையின் உச்சியில் உச்சி பிள்ளையார் கோவிலும் உள்ளது.

இந்நிலையில், காதலர் தினமான இன்று, மலைக்கோட்டைக்கு சாமி தரிசனம் செய்ய காதலர்கள் ஜோடியாக வந்தனர். அப்போது அவர்களை கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுத்த வீர விவேகானந்தர் பேரவை, அனுமன் சேனா அமைப்புகளை சேர்ந்த 3 பேர், 'திருச்சி மலைக்கோட்டையை காதல் கோட்டையாக மாற்றக்கூடாது' என வலியுறுத்தி, காதலர்களுக்கு தாலி (மஞ்சள் கயிறு) வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பக்தர்களுக்கு இடையூறு செய்ததாக கூறி, 3 பேரை திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். திருச்சி மலைக்கோட்டையில் பாதுகாப்பு காரணங்களுக்காக காதல் ஜோடிகளை சாமி தரிசனம் செய்ய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள்.