தமிழ்நாடு

”இத்துடன் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்” - சூர்யா சிவா ட்வீட்

Sinekadhara

ஆடியோ சர்ச்சையால் பாஜக கட்சியிலிருந்து 6 மாத காலத்திற்கு நீக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா இருவரும் சில தினங்களுக்கு முன்பு செல்போனில் பேசிக்கொண்டபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இருவரும் சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் பேசினர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சம்பவம் குறித்து அறிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட பா.ஜ க அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. பா.ஜ க மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் டெய்சி மற்றும் திருச்சி சூர்யா சிவா ஆகியவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, இருவரும் சுமூகமாக பேசி முடித்துக்கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், பெண்களை இழிவுபடுத்துவதை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும், சுமூகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும், அதை மாநில தலைவராக தான் ஏற்க மறுப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால் கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம் எனவும், அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர்மேல் தனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால் பொறுப்பு அவரை தேடிவரும் என்றும் அண்ணாமலை அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாகவும், பாஜக எதிர்பார்த்த வளர்ச்சியை பெற அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் அப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டு தெரிவித்து சூர்யா சிவா தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், “அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும். 

அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி” என்று குறிப்பிட்டுள்ளார்.