தமிழ்நாடு

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை... 11 கிலோ நகைகள் மீட்பு

Rasus

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை வழக்கில் 11 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2-ஆம் தேதி திருச்சி லலிதா ஜூவல்லரி சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பிரபல வங்கிக் கொள்ளையன் திருவாரூர் முருகன் லலிதா ஜுவல்லரியில் கைவரிசை காட்டியது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய காவல்துறையினர் மணிகண்டன் என்பவரை அக்டோபர் 3-ஆம் தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

(முருகன்)

மணிகண்டனோடு இருசக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ் தப்பியோடிவிட்டார். இவர் திருவாரூர் முருகனின் சகோதரி கனகவல்லியின் மகன் ஆவார். இதனையடுத்து கனகவல்லியை கைது செய்த‌ காவல்துறையினர் சுரேஷை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து  செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். அதேபோல, திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கொள்ளையர்களுக்கு திட்டம் வகுத்து தந்த முருகன் பெங்களூர நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை வழக்கில் 11 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முருகன் அளித்த தகவலின் பேரில் பெங்களூரு போலீசார் நகைகளை மீட்டு சென்றபோது, பெரம்பலூர் போலீசார் துரத்திச் சென்று நகைகளை மீட்டனர். மீட்கப்பட்ட நகைகளை பெரம்பலூர் போலீசார் ஆய்வு செய்தபோது, அது லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைதான் எனத் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.