அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியவர்கள் மீது தடியடி நடத்திய எஸ்ஐ மீது தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழரசூர் ஊராட்சியில் நேற்று 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக தகவலறிந்த கல்லக்குடி காவல் நிலைய எஸ்ஐ இளங்கோவன் மற்றும் போலீசார் கீழரசூர் கிராமத்திற்குச் சென்று அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று கூறி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக இருந்த அனைத்து பலகைகளையும் அப்புறப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து மதிய நேரத்தில் ஜல்லிக்கட்டு விடுவதாக தகவல் தெரிந்து இரண்டாவது முறையும் அங்கு சென்று அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து மீண்டும் மூன்றாவது முறை மாடுகளை அவிழ்த்து விடுவதாக வந்த தகவலையடுத்து எஸ்ஐ இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து சென்ற ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விழாக்குழுவினர் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் தடியடி நடத்திய போலீசார் மீது சரமாரியாக கல்வீசி தாக்கியதில் எஸ்ஐ இளங்கோவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார், தாக்குதல் நடத்தியதாக 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.