தமிழ்நாடு

திருச்சி: இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம்; உறவினர்கள் நெகிழ்ச்சி

kaleelrahman

திருச்சியில் 6 லட்சம் ரூபாய் செலவில் தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த திருமணம் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சி உய்யகொண்டான் திருமலையை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துனர் ராஜேந்திரன். இவருடைய மனைவி மல்லிகா (55). இவர் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் சப் -இன்ஸ்பெக்டராக உள்ளார். இந்நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக ராஜேந்திரன் உயிரிழந்தார்.

இந்த நிலையில் மல்லிகாவின் மூத்த மகள் ஜெயலட்சுமிக்கும், மும்பை தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கீர்த்தி வாசனுக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதையடுத்து தந்தை மீது அதிகபாசம் கொண்ட ஜெயலட்சுமி தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என சோகத்தில் இருந்துள்ளார்.
இந்த குறையை போக்க மல்லிகா குடும்பத்தினர் ரூ.6 லட்சம் செலவில் ராஜேந்திரனின் மெழுகு சிலையை தயாரிக்க பெங்களூருவில் ஆர்டர் கொடுத்தனர். ராஜேந்திரன் பேண்ட், சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் மெழுகுசிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டது.

இந்த சிலையை புரோகிதர்கள் முன் வைத்து திருமண சடங்குகள் நடந்தது. அப்போது பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற ஜெயலட்சுமி தந்தையின் மெழுகுசிலையை பார்த்து கண்ணீர் விட்டார். இதை கண்டு திருமண மண்டபத்துக்கு வந்த உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

- வி.சார்லஸ்