தமிழ்நாடு

திருச்சி: சேற்றில் குதுகலமாக விளையாடி பரவசப்பட்ட யானை அகிலா!

நிவேதா ஜெகராஜா

சேற்றில் குதுகலமாக விளையாடிய திருச்சி திருவானைக்காவல் யானை அகிலா, எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் இறை பணியாற்றி வரும் யானை அகிலாவிற்கு, கோயிலில் குளிப்பதற்காக நீச்சல்குளம் கட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப் படியும் இந்து சமய அறநிலைத்துறை அறிவுறுத்தலின்படி கோயில் உள்ள நாச்சியார் தோப்பில் ஏற்கனவே இருந்து வரும் நீச்சல் குளம் அருகில் யானை அகிலா சேற்றில் குளிப்பதற்காக புதியதாக 1200 சதுரடியில் சேற்றுக் குளியல் குளம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 50,000 மதிப்பில் களிமண், செம்மண், மணல் ஆகியவைகள் சுமார் ஒன்றரை அடி உயரம் கொட்டப்பட்டு உள்ளது. இதில் 100 கல் கிலோ உப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த களிமண்ணில் நீர் நிரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து யானை அகிலா அந்த சேற்று குளத்திற்குள் இறக்கப்பட்டது. இதை கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்த யானை அகிலா, சேற்றுக்குள் தனது துதிக்கையால் அடித்து விளையாண்டு சேற்றை அள்ளி தன்மீது போட்டுக்கொண்டது. எப்பொழுதும் யானைக்கு தண்ணீரைக் கண்டால் மகிழ்ச்சி தான் அதுவும் சேற்று தண்ணீர் என்றால் கூடுதல் மகிழ்ச்சிதான். இதை யானை அகிலாவின் மகிழ்ச்சி நமக்கு மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.