திருமா  முகநூல்
தமிழ்நாடு

திருச்சி கிழக்கில் போட்டி..? துணை முதல்வராகும் திருமா..? மாறும் தமிழக அரசியல் களம்?

வரவிருக்கும் திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் விசிக தலைவர் தொல். திருமாவளவனைப் போட்டியிட வலியுறுத்தி, அக்கட்சியின் சேலம் மாவட்டப் பிரிவு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

Prakash J

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், அதிக இடங்களைப் பெற்ற தவெக, திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், ஐ.யூ.எம்.எல். உள்ளிட்டபிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தவிர, ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் பங்கு கொடுத்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசியலில் நாள்தோறும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலரும் தவெகவுக்குப் படையெடுத்து வருகின்றனர். தவிர, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளில் சில, தவெகவில் ஐக்கியமாகியுள்ளன. தற்போது, மதிமுகவும் அக்கூட்டணியில் போய் இணைந்துள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் ஒரு புதிய ஆளும் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாக முதல்வர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது.

அக்கூட்டணிக்கு விரைவில் பெயர் வைக்கும் முடிவிலும், அதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்லும் முடிவிலும் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், வரவிருக்கும் திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் விசிக தலைவர் தொல். திருமாவளவனைப் போட்டியிட வலியுறுத்தி, அக்கட்சியின் சேலம் மாவட்டப் பிரிவு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் வெற்றிபெறும் பட்சத்தில், தமிழக அமைச்சரவையில் துணை முதல்வராக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

திருமா

ஆனால், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தற்போதைய எம்பியாக இருக்கும் திருமாவளவன், இந்தத் தீர்மானம் குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக, இதுகுறித்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது உறுதியான தகவலோ வெளியாகவில்லை. சமூக ஊடகங்கள் மற்றும் சில அரசியல் விவாதங்களில் இதுகுறித்து ஊகங்கள் பேசப்பட்டாலும், அவை உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், தவெக ஆட்சியமைத்தபோது, விசிக ஆதரவு தெரிவித்த நிலையிலும் திருமாவுக்கு துணை முதல்வர் வழங்கப்பட இருப்பதாகச் செய்திகள் பரவின. ஆனால், இதை அப்போதே மறுத்த அவர், “துணை முதல்வர் பதவியை ஒருபோதும் கோரியதில்லை”எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இவ்விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.