ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் சுவாசிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை என மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழைப்பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குழந்தை 26 அடியில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. குழந்தை சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இரண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தை மீட்கப்பட்ட உடனே சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸும், மருத்துவக் குழுவும் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் குழந்தையின் நிலையை கண்ட மருத்துவக் குழுவினர் எந்தவித குழந்தை சுவாசிப்பதில் எந்த பிரச்னையும் இல்லையென்றும், குழந்தை நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் வருகை தந்துள்ளனர். தற்போது குழந்தையை கயிறு கட்டி அதன்மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மதுரையில் இருந்து மணிகண்டன் என்பவர், குழந்தையை மீட்பதற்காக பிரத்யேக கருவியை கொண்டு வந்துள்ளார். அதன்மூலம் கயிறு கட்டி குழந்தையை மீட்டு வருகின்றனர்.