தமிழ்நாடு

“600 அடி ஆழ்துளை கிணறு..! சுர்ஜித் விழுந்தது எப்படி ?” - உறவினர் பிரத்யேக தகவல்

webteam

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் விழுந்தது எப்படி என உறவினர் வின்சண்ட் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் சுர்ஜித் என்ற இரண்டு வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை தவறி ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்தது.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய குழந்தையின் உறவினர் வின்செண்ட், “அந்த கிணறு மூடப்பட்டு 4 வருடங்களுக்கு மேலாக ஆகிறது. கிணறு இத்தனை நாட்களாக மூடிய நிலையில் தான் இருந்தது. ஆனால் மழையால் தற்போது மண் உள்வாங்கியுள்ளது. இதனால் குழந்தை விளையாடும் போது உள்ளே விழுந்திருக்கிறது. அந்த கிணறு 600 அடி ஆழத்திற்கு தொண்டப்பட்டதாம். தற்போது 30 அடி வரை மண் உள்வாங்கியுள்ளது” என்று கூறினார். 

இதற்கிடையே குழந்தையை மீட்கும் பணி 5 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையே மதுரையில் இருந்து மணிகண்டன் என்பவர், குழந்தையை மீட்பதற்காக பிரத்யேக கருவியை கொண்டு வந்துள்ளார். அதன்மூலம் குழந்தை தற்போது மீட்கப்பட்டு வருகிறது. குழந்தையின் ஒரு கையில் சுருக்கு போடப்பட்டிருக்கும் நிலையில், மறு கையிலும் சுருக்கு போடும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “குழந்தை நலமாக உள்ளது. குழந்தையின் சித்தப்பா, தந்தை உள்ளிட்டோரை வைத்து பேசி குழந்தையை ஆறுதல் படுத்தியுள்ளோம். பிரேத்யக கருவி மூலம் மிகவும் நுட்பமான முறையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. குழந்தை பத்திரமாக மீட்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். குழந்தை மீட்கப்பட்டால் அதற்கு உடனே சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளது எனவும் அவர் கூறினார்.