தமிழ்நாடு

திருச்சி: சூடுபிடித்த பொங்கல் வியாபாரம்.. ரூ. 1 கோடிக்கு விற்பனையான ஆடுகள்

kaleelrahman

திருச்சி சமயபுரம் ஆடு வாரச் சந்தையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இடத்தில் பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் ஆடு வாரச் சந்தை நடைபெற்று வருகிறது.

இந்த வாரச் சந்தைக்கு திருச்சி, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகள் வளர்ப்பவர்களும் ,வியாபாரிகளும் வந்து ஆடுகளை விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் இங்கு விற்பனை செய்யும் ஆடுகளை திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவிலான ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.


இந்நிலையில் தமிழர்களின் திருநாளான பொங்கல் விழா வரும் 14ஆம் தேதி வர இருக்கிறது. அதையொட்டி இன்று சமயபுரம் வாரச் சந்தையில் வழக்கத்தை விட அதிகளவில் வர்த்தகம் நடைபெற்றது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில், ஆடுகளை வாங்க வந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்தனர். சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. சந்தையில் வியாபாரம் சூடுபிடித்தாலும், அங்கு தனி நபர் இடைவெளி, முகக்கவசம் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை.