தமிழ்நாடு

திருச்சி ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதா?-ஆய்வுசெய்ய ஆணையம் நியமனம்!

webteam

திருச்சி, திருவானைக் கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆய்வின் அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவானைகோவில் சேர்ந்த இளஞ்செழியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி மாவட்டம், திருவானைக்கோவில் கணபதி நகரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்ற வழிபாட்டுத்தலம் இருக்கின்றது. இந்த சித்தர் பீடம் பொது பாதையை ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது. மேலும் முறையான அனுமதியும் பெறவில்லை. எனவே, சட்டவிரோதமாக பொதுமக்களின் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள இந்த சித்தர் பீடத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதிபராசக்தி சித்தர் பீடம் தரப்பில், இது தனி நபர் பட்டா இடத்தில் கட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

வாதங்களை கேட்ட நீதிபதிகள் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடம் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதா? அல்லது தனிநபர் பட்டா இடத்தில் கட்டப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் வழக்கறிஞர் ஆணையர் குறிப்பிட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆய்வின்போது மாவட்ட நிர்வாகம் சார்பாக கிராம நிர்வாக அதிகாரி நில அளவையர்கள் உரிய ஆவணங்களை கொடுத்து ஆய்வு செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர் ஆணையர் செப்டம்பர் 27ஆம் தேதி ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.