தமிழ்நாடு

பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு

webteam

மதுரையில் வாகன விபத்தில் படுகாயமடைந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் காந்தி. வயிற்று பிழைப்பிற்காக உடல்களில் சாட்டையால் அடித்து கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்தவர் இவர். இவர் ஒரு பட்டதாரி இளைஞர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சக்கிமங்கலத்தில் இருந்து இவர் மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த தடுப்பில் மோதியதில் படுகாயமடைந்தார் காந்தி. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காந்தி உயிரிழந்துள்ளார். 

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்தச் சமுகத்தில் படித்து பட்டதாரியாகி சாதி சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் அரசுப் பணிக்கு செல்ல முடியாமல் இருந்த 4 பேரில் காந்தியும் ஒருவர். சாதிச் சான்றிதழ் வேண்டி மாவட்ட ஆட்சியர் வரை அனைத்து துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து சான்றிதழுக்காக இவர் பல்வேறு முயற்சிகள் எடுத்து இறுதியில் பயன் ஏதும் இல்லை. ஆகவே இவர் தான் சார்ந்த சமூகத்திலுள்ள குழந்தைகளுக்கு தனது சொந்த முயற்சியால் டியூசன் எடுத்து வந்தார்.

மேலும், அடித்தட்டில் உள்ள அவரது சமூக இளைய தலைமுறையினரை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார் காந்தி. அப்படிப்பட்ட இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சோகம் அம்மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது கனவை நிறைவேற்றும் விதமாக அவரது சமூக மக்களுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக சாதிச் சான்றிதழ் வழங்கி உதவ வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.