தமிழகம் முழுவதும் இன்று முழு முடக்கம் அமலாகியுள்ள நிலையில், சென்னை கோயம்பேடு வரும் வெளிமாவட்ட பயணிகள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர, மற்ற பணிகளுக்கு அனுமதியில்லை என்றும், பொதுமக்கள் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரியவேண்டாம் எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மற்ற ஊர்களிலிருந்து இன்று காலை சென்னைக்கு வந்தவர்கள், அங்கிருந்து அவர்களின் இருப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே அமர்ந்துள்ளனர்.
பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த வாகனங்கள், வாடகை கார்களில் வீடுகளுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சூழலை பயன்படுத்தி, வாடகை கார்களில் கட்டணம் அதிகமாக உள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர் எனினும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்திறங்கும் வெளிமாவட்ட பயணிகள், வீடுகளுக்குச் செல்லவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.