தமிழ்நாடு

`புகைப்பிடித்தோ மதுஅருந்தியோ ஊழியர்கள் வந்தால்...’- போக்குவரத்து கழகம் விடுத்த எச்சரிக்கை

webteam

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பேருந்து பணிமனைக்கு வரும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணிமனையில் பின்பற்ற வேண்டிய விதிகள் தொடர்பாகவும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக ஒரு நாளைக்கு சுமார் 3,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது 37 பணிமனைகள் மூலமாக பேருந்துகள் பராமரிக்கப்பட்டு பயணிகள் சேவைக்காக இயக்கப்படுகிறது. இதில் பணிமனையில் பின்பற்ற வேண்டிய விதிகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது.

அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிற விஷயங்கள்:

* பணிமனை உள்ளே பணி செய்யும் ஊழியர்கள் புகை பிடித்தல் மற்றும் மது அருந்தும் நிலையில் இருக்க கூடாது.

* பணிமனைக்கு உள்ளே  பேருந்துகளை 5 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும்.

* பேருந்திற்குள் welding பணி செய்திடும் போது கட்டாயம் battery wire துண்டிக்கப்பட வேண்டும். 

* தொழில்நுட்ப பணிகளுக்காக பேருந்துகள் பணிமனைக்குள் இயக்கிடும்போது, ஓட்டுனர் உரிமம் இல்லாத எந்த ஒரு பணியாளரும் பேருந்தை இயக்கக் கூடாது.

* இயந்திரங்களை கையாளும் பணியாளர்கள் பாதுகாப்பு உடை அணிந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 

* பணியின் போது கைபேசிகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்

* பணியாளர் பணி நேரத்தில் பணிமனையை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், உரிய மேற்பார்வையாளரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.

* பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை கிளை மேலாளரும், பணியிலிருக்கும் மேற்பார்வையாளரும், பாதுகாவலர்களும் கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும்

இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.