சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் வாரன் ரோடு பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் திருநங்கை மனோஜ் (எ) நந்திதா (எ) ஜெசிக்கா(19). இவர் கடந்த 7-ம் தேதி இரவு வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த வந்த சேகர் (57) என்பவர் திருநங்கையை தடுத்து நிறுத்தி எப்படி இருக்கிறாய்? எனக்கேட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து திருநங்கையை தொட்டு பேசி பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த திருநங்கை ஜெசிக்கா முதியவர் சேகரை அடித்து உதைத்து சுவரில் மீது தள்ளிவிட்டதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். மேலும், திருநங்கை அங்கிருந்து தப்பிச் சென்றார்.
மறுநாள் 8-ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சேகர் மயங்கி இருப்பதை பார்த்து உடனே 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சேகரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அபிராமபுரம் போலீசார் மருத்துவமனை விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே சேகர் மேற்சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் போலீசார் சேகர் புகாரில் திருநங்கை ஜெசிக்கா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சேகர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக திருநங்கை தகவல் தெரிவித்ததுடன், பாலியல் சம்பவம் குறித்து சேகர் மீது, திருநங்கை புகார் அளித்தார்.
அதன்பேரில் அபிராமபுரம் போலீசார் சேகர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேகர் 11 ம் தேதி நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து திருநங்கை ஜெசிக்காவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.