திருநங்கை ரக்ஷிகா ராஜின் பெயர் செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செவிலியர் படிப்பை முடித்து தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய திருநங்கை ரக்ஷிகா ராஜ் என்பவர் விண்ணப்பித்தார். அப்போது மூன்றாம் பாலின பெண் என தன்னை பதிவு செய்யக்கோரி அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூன்றாம் பாலினத்தவரின் பதிவு குறித்த கவுன்சில் விதிகளில் திருத்தம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் மனுதாரரை பொறுத்தவரை மூன்றாம் பாலின பெண் என பதிவு செய்ய இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரும் வரை திருநங்கை ரக்ஷிகா ராஜின் பெயரை செவிலியர் கவுன்சிலில் தற்காலிகமாக பதிவு செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
இந்நிலையில், ரக்ஷிகா ராஜின் பெயர் தமிழ்நாடு செவிலியர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரக்ஷிகா ராஜ், “செவிலியர்கள் பதிவு பட்டியலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடம் இல்லாதததால் நான் நீதிமன்றம் வரை செல்ல வேண்டியது இருந்தது. நமது வாழ்வில் பல தடைகள் வரும். அதனை உடைத்து நாம் முன்னேறவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.