தமிழ்நாடு

தூத்துக்குடியில் திருநங்கை திருமணம்... வாக்குவாதமும்... சமரசமும்...!

தூத்துக்குடியில் திருநங்கை திருமணம்... வாக்குவாதமும்... சமரசமும்...!

Rasus

தூத்துக்குடியில் சிவன் கோயிலில்‌ திருநங்கையின் திருமணத்துக்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை நடத்தி வைத்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்த அருண்குமாரும் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த ஸ்ரீஜா என்ற திருநங்கையும் ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் அருண்குமாரும், ஸ்ரீஜாவும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சிவன் கோவிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கோவில் அலுவலகத்தில் 600 ரூபாய் முன்பணம் செலுத்தி அருண்குமார், ஸ்ரீஜா பெயர் பதிவு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திருமணம் செய்வதற்காக அருண்குமாரும், ஸ்ரீஜாவும் உறவினர்களுடன் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அருண்குமார், ஸ்ரீஜா திருமணத்தை கோவிலில் நடத்த முடியாது என தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகளுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து கோவில் அலுவலகத்திற்கு வந்த மத்தியபாகம் போலீசார் திருநங்கைகள் மற்றும் கோயில் அதிகாரிகளுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அருண்குமார் ஸ்ரீஜாவுக்கு திருமணம் நடைபெற்றது.