தமிழ்நாடு

“எதிரிகளோடு களத்தில் கலந்திருந்த துரோகி!” - மகேந்திரனை கடுமையாக சாடிய கமல்ஹாசன்

EllusamyKarthik

“எதிரிகளோடு களத்தில் கலந்திருந்த துரோகி!” - மநீமவில் இருந்து விலகிய மகேந்திரனை கடுமையாக சாடிய கமல்ஹாசன்

சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. அதில், கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தேர்தல் வியூகம் வகுத்த சுரேஷ் அய்யர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 

இதில், காரசாரமான விவாதம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணைத் தலைவர் மகேந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, கட்சியை புனரமைக்கும் வகையில், துணை தலைவர் பொன்ராஜ், பாண்டிச்சேரி துணைத் தலைவர் தங்கவேலு, பொதுச் செயலாளர்கள் சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல், முருகானந்தம், மவுரியா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் உமாதேவி ஆகியோர் பதவி விலகலுக்கான கடிதத்தை அளித்துள்ளனர். 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் ஜனநாயகமே இல்லை எனவும், தேர்தல் தோல்விக்குப் பிறகும் கமல்ஹாசன் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் என்கிற நம்பிக்கை இல்லாததாலேயே கட்சியில் இருந்து விலகுவதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மகேந்திரன் அறிக்கை வெளியிட சில மணி நேரங்களிலேயே கமல்ஹாசன் தரப்பில் இருந்தும் ஒரு காட்டமான அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், “சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெருங்கனவை முன்வைத்து முதல்வது சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம். களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம். துரோகிகளை களையெடுங்கள் என்பது தான் எல்லோரது ஒருமித்த குரலாக இருந்தது. அதில் முதலாவதாக களைய வேண்டியவர் தான் டாக்டர் ஆர்.மகேந்திரன். 

ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப்போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான். 

தன்னை எப்படியும் நீக்கிவிடுவார்கள் என அறிந்து அவரே விளகிவிட்டார். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம் தான். தோல்வியின் போது கூடாரத்தை பிய்த்துக் கொண்டு ஓடும் கோழைகளை ஒருபோதும் நாம் பொருட்படுத்தியதில்லை” என காட்டமாக தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன்.