செய்தியாளர்: ஆர்.ரவி
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சி, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர்கள் சுந்தரராஜன் (70). - பொன்னம்மாள் (65) தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், மூத்த தம்பதிகளான இருவரும் கெங்கவல்லியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். பொன்னம்மாள் கடந்த பத்து ஆண்டுகளாக நீரழிவு, மற்றும் உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு இருந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மூலம் நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் உடல் நிலை பாதிப்பில் அவதியுற்று வந்த பொன்னம்மாள் தனது கணவர் சுந்தரராஜனிடம் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியுள்ளார். அதற்கு கணவரும் தானும் உடன் தற்கொலை செய்வதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் விஷம் குடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து நீண்ட நேரமாக வீடு திறக்காததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
இந்நிலையில், இருவரையும் மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சுந்தரராஜனும் உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.