தமிழ்நாடு

திருச்சி: சோப் எடுக்க பக்கெட்டுக்குள் குனிந்த ஒரு வயது குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்

நிவேதா ஜெகராஜா

திருச்சியில் தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் ஹரிஷ். ஒன்றேகால் வயதாகும் குழந்தை ஹரிஷ், தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுந்த சோப்பை எடுப்பதற்காக குனிந்துள்ளது. அது எட்டாததால், தலைகீழாக கவிழ்ந்து உள்ளது. அதனை ஹரிஷ் குடும்பத்தினர் கவனிக்கவில்லை. சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஹரிஷ் தண்ணீருக்குள் தலைகீழாக கவிழ்ந்து உள்ளது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

உடனடியாக ஹரிஷை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஹரிஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களின் பெற்றோர், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்திற்கு ஹரிஷ் உடலை எடுத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.