தமிழ்நாடு

இரவில் டிப்பர் லாரி மீது மோதிய கார்... 5 வயது சிறுமி உட்பட இருவருக்கு நேர்ந்த துயரம்!

webteam

பெரம்பலூர் அருகே டிப்பர் லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் சிறுமி உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் சேர்வராயன் குப்பம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (27), கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒகையூரைச் சேர்ந்த மகேஸ்வரி (22), இவரின் ஐந்து வயது மகள் ஆகிய மூவரும் சிங்கப்பூர் செல்வதற்காக நேற்று இரவு ஒரே காரில் திருச்சி விமான நிலையம் நோக்கிச் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை வழியனுப்புவதற்காக ஜெயவேல், நாகமுத்து ஆகிய இருவரும் உடன் சென்றுள்ளனர். இந்த காரை கடலூர் சேர்வராயன் குப்பத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். இந்நிலையில் கார், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி பகுதி அருகே திருப்ப முயன்றபோது டிப்பர் லாரியின் பின்பகுதியில் மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சிங்கப்பூர் செல்லவிருந்த ரஞ்சித்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். 5 வயது சிறுமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காரில் பயணம் செய்த மற்ற மூன்று பேரும் பலத்த காயங்களுடனும், டிப்பர் லாரி டிரைவர் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த சிலமணி நேரங்களில் சிங்கப்பூர் நோக்கி விமானத்தில் செல்ல இருந்த இருவர், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.