தமிழ்நாடு

சென்னையில் ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்பனை - 100 பேருக்கு அபராதம்; கடை உரிமையாளர்கள் கைது

சங்கீதா

சென்னையில் ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர்களை போக்குவரத்து காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னையில் பைக் சாகசம் மற்றும் வாகன ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை கண்டறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, விலை உயர்ந்த பைக்குகளில் நம்பர் பிளேட்டை மறைத்து வைத்து வாகனத்தை இயக்கியது தெரியவந்தது.

இதையடுத்து போக்குவரத்து காவல்துறை சிறப்பு வாகன தணிக்கை ஒன்றை நடத்தி, விலைஉயர்ந்த பைக்குகளை சோதனை செய்தபோது, சுமார் 100 வாகன ஓட்டிகள் ஸ்லைடிங் நம்பர் பிளேட் (sliding number plate) எனப்படும் மறைத்து வைக்கும்படியான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து 100 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், நம்பர் பிளேட் கடைகளிலும் அதிரடியாக சோதனை நடத்திய காவல்துறையினர், அண்ணாசாலை மற்றும் ஆலந்தூர் பகுதியில் உள்ள நம்பர் பிளேட் கடைகளிலிருந்து 32 ஸ்லைடிங் நம்பர் பிளேட்களை பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக போக்குவரத்து விதிகளை மீறி ஸ்லைடிங் நம்பர் பிளேட்களை விற்பனை செய்ததாக 2 கடைகளின் உரிமையாளர்களையும் கைது செய்தனர்.