தமிழ்நாடு

கொடைக்கானலில் தொடரும் மழை !

webteam

பல நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்த கொடைக்கானலில் மெல்ல பருவநிலை மாறத்துவங்கியுள்ளது. தொடர் மழையால் பாம்பாறு அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.  

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பல நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் கரு மேகங்கள் சூழ்ந்து மலைப்பகுதியின் நாலாபுறமும் குளிர் நிலவியது. குளுகுளு குளிர் வீச தொடங்கிய அந்தச் சூழல், குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் கொடைக்கானலின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான விளங்கும் பாம்பாறு அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.

(File Photo)

அருவியில் உள்ள படிக்கட்டு அமைப்புகளில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் ஏறி நின்று, புகைப்படம் எடுப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஆர்பரிக்கும் அருவியில் ஆனந்த குளியலும் இடுகின்றனர். சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக அருவியில் குளிப்பதற்கு உரிய பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வார விடுமுறை நாட்களான இன்று ரம்மியமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.