கொடைக்கானல் அருகே தலையாறு அருவி காட்சி பகுதியில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப்பயணிகள் செல்ஃபி எடுத்து வருகிறார்கள். கொடைக்கானல் வத்தலக்குண்டு சாலையில், டம் டம் பாறை பகுதியில் தலையாறு அருவியை காண, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் உயர் கோபுரம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கோபுரம் தற்பொழுது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அதனை ஒட்டியுள்ள வேலிகள் பெயர்ந்து பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் தவறி விழும் சூழ்நிலை உருவாவதாகவும் தொடர் புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து வனத்துறை அந்த பகுதிக்குள் நுழைய தடை விதித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளது. இதனையும் மீறி சுற்றுலா பயணிகள் அந்த பகுதிக்கு சென்று பள்ளத்தாக்கின் விளிம்பில் நின்று செல்பி எடுப்பதும், விளையாடுவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை வனத்துறையினர் கவனத்தில் எடுத்து, வேலிகளை சரிசெய்து, உயர் கோபுரத்தை இடித்து புதிதாக கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.