மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டை பாறை என்றழைக்கப்படும் வானிறை பாறையை உள்ளே சென்று பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலை அழகை உலகுக்கு பறைசாற்றும் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, ஐந்துரதம் மற்றும் வானிறை பாறை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இச்சிற்பங்களால், யுனெஸ்கோ அங்கீகாரம், மத்திய அரசின் புவிசார் குறியீடு மற்றும் உலக கைவினை நகரம் என பல்வேறு அங்கீகாரங்கள் மாமல்லபுரத்துக்கு கிடைத்துள்ளன. இதனால், கலைச் சின்னங்களை கண்டு ரசிக்க வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இருநாடுகளுக்கு இடையேயான முக்கிய பேச்சு வார்த்தைகளுக்காக, மாமல்லபுரத்தில் கடந்த 11 ஆம் தேதி நேரில் சந்தித்து பேசினர். இதற்காக, தமிழக அரசு சார்பில் மாமல்லபுரம் நகரம் மற்றும் கலைச் சின்ன வளாகங்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, சாலைகள், கலைச் சின்ன வளாகங்கள் அழகுபடுத்தப்பட்டன.
இந்நிலையில் ஏற்கெனவே தொல்லியல்துறை கட்டுபாட்டில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய பகுதிகளை பார்வையிட உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு 40 ரூபாயும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 600 ரூபாயும் வசூலிக்கபட்டு வந்தன. இந்நிலையில் இன்று முதல் வானிறை பாறை உள்ள பகுதிக்குள் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தொல்லியல்துறை சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.