தமிழ்நாடு

சென்னை மொத்த வாக்காளர்கள் 37.92 லட்சம்: வரைவு பட்டியல் வெளியீடு

சென்னை மொத்த வாக்காளர்கள் 37.92 லட்சம்: வரைவு பட்டியல் வெளியீடு

webteam

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன

சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி துணை ஆணையர் லலிதா இன்று வெளியிட்டார். அதனடிப்படையில் சென்னையில் உள்ள மொத்த வாக்காளர்கள் 37.92 லட்சம் என்றும் அதில் ஆண்கள் வாக்காளர்கள் 18.71  லட்சம் என்றும், பெண்கள் 19.19 வாக்காளர்கள் லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினம் 906 வாக்காளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர்கள் பட்டியல் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்றும் அங்கு சென்று வாக்காளர்கள் தங்களுடைய பெயர் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியான நிலையில் அதில் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக வரும் 9, 23 ஆகிய தேதிகளிலும் அக்டோபர் மாதம் 7, 14 ஆகிய தேதிகளிலும் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை சிறப்பு முகாம்களில் பெற்று அங்கேயே சமர்ப்பிக்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி மற்றும் வயதுக்கான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். 

www.nvsp.in என்ற இணையதளத்திலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள் அதாவது 18 முதல் 25 வயதுக்குட்பட்ட மனுதாரர்கள் தவிர, மற்றவர்கள் முந்தைய முகவரி மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணை குறிப்பிட வேண்டியது கட்டாயமாகும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, படிவம் 6Aவை நேரிலோ அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலோ அனுப்பலாம். 

நேரில் விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் மற்றும் விசா குறித்த ஒளி நகல்களை வழங்க வேண்டும். அதனை வாக்காளர் பதிவு அதிகாரி அசல் பாஸ்போர்ட்டுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. படிவம் 6Aவை வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபாலில் அனுப்பினால் பாஸ்போர்ட்டின் ஒளிநகல்களை சுயசான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.