தமிழ்நாடு

டன் கணக்கில் இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா – கடலோர காவல்படை நடவடிக்கை எடுக்குமா?

webteam

20 நாட்களில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 1200 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தமிழக கடலோர பகுதிகளான நாகை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகள் இலங்கைக்கு மிக அருகாமையில் சுமார் 25 நாட்டில்கல் தொலைவில் மட்டுமே உள்ளதால் இங்கிருந்து அதிகப்படியான கஞ்சா கடத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களில் மட்டும் இலங்கை கடற்படை மூன்று கோடி ரூபாய் மதிப்புடைய 1200 கஞ்சா மற்றும் 1600 கிலோ பீடி இலையை கைப்பற்றி கடத்தல்காரர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதேபோல் தமிழக கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படையினரும்; தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து கடலோர காவல்துறை காவல் நிலையத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் துணையோடு கடத்தல்காரர்கள் மிக துல்லியமாக தங்களுடைய கடத்தல் தொழிலில் ஈடுபட்டு கஞ்சாவை கடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை இலங்கைக்கு கடத்திச் சென்று, அங்கிருந்து மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா கேரளாவில் இருந்து வருவதாக இலங்கை கடற்படையினர் உறுதி செய்கின்றனர்.

மேலும் கடலோர காவல் குழுமத்தில் உள்ள உயர் அதிகாரிகள் முழுமையாக ரோந்து பணியில் ஈடுபடாமல், மாதந்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டதாக படகுகளுக்கு டீசல் போடப்பட்டதாக தவறான பொய் கணக்குகளை காட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை உயர் அதிகாரிகள் தங்களுக்குள் பிரித்துக் கொள்வதாக புகார்கள் எழுந்து வருகிறது.

இதற்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உரிய நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.