தமிழ்நாடு

அன்னதானம், ஊர்வலம்... தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

JustinDurai

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.  

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர்.

ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை, 74 இடங்களில் எம்.எல்.ஏ தலைமையில் அதிமுகவினர் கொண்டாடினர். ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அரியலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளையொட்டி அலங்கரிக்கப்பட்ட அவரின் திருஉருவ படத்திற்கு அதிமுகத் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள், கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வேதாரண்யம் நகர ஒன்றிய கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து ராஜாஜி பூங்கா அருகில் அலங்கரிப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு கட்சி  நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நினைவு கூர்ந்த தமிழிசை

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், ''பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை. துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.