தமிழ்நாடு

”தெரு நாய்களின் அராஜகத்தை தடுக்க, அவற்றை தத்தெடுக்க வேண்டும்”- ராதாகிருஷ்ணன் பேட்டி

நிவேதா ஜெகராஜா

தெரு நாய்களின் அராஜகத்திலிருந்து மக்களை காக்க, நாய்களை தத்தெடுக்க வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் ஒரு குழந்தையை தெருநாய் உடல் முழுவதும் கடித்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். அவர் பேசுகையில், “தெரு நாய்கள் மட்டுமில்லை, பிற விலங்குகள் தெருவில் இருப்பதாலும் நிறைய ஆபத்துகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் தடுக்க, நாம் அதை தத்தெடுக்க வேண்டியது தற்போது அவசியமாக இருக்கிறது. அப்படி இருந்தால் அவை ஆக்ரோஷமாக மாறாது. இதை பொதுமக்களும் உணர வேண்டும்.
நாய் கடித்துவிட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். மாறாக அந்த நாயை அடித்து கொள்ள வேண்டும் என நினைக்க கூடாது. இது இன்னும் ஆபத்தாக மாறிவிடும். அதேபோல் ரேபிஸ் ஊசி போடுவதற்கு மாவட்ட வாரியாக அதற்கான பணிகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. மாவட்ட கால்நடை மருத்துவமனையில் அதற்கான பணிகள் நடந்து வருகின்றது” என தெரிவித்தார்