தமிழ்நாடு

''எனக்கு கொலை மிரட்டல் வருகிறது''- சிலரின் அநாகரீக பேச்சால் மனம்துவண்ட தமிழ்நாடு வெதர்மேன்

webteam

தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வருத்தம் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இணையவாசிகள் இடையே பெயரெடுத்தவர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். மழைக்காலங்களில் இவரின் பதிவுகளை பின் தொடர்ந்து அவர் கூறும் வானிலை அறிக்கையை கேட்டு செயல்படுபவர்கள் அநேகம். குறிப்பாக சென்னையின் மழையை ஏரியா வாரியாக நேரத்தைக் குறிப்பிட்டே பதிவிடுவார் பிரதீப்.

நகரங்களில் பரபரப்பாய் ஓடிக்கொண்டு இருப்பவர்கள் அவரின் பதிவுக்கு ஏற்ப தங்களை மழைக்கும் புயலுக்கும் தயார் செய்துகொள்வார்கள். வானிலை ஆய்வு மீதான அதீத காதலால் இதனை ரசித்து செய்து வரும் பிரதீப்ஜானுக்கு தற்போது கொலை மிரட்டல்களும் வருவதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இதனை அவரே சற்று வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். அவருக்கு வரும் மிரட்டலுக்கு காரணமும் அதே வானிலை அறிக்கை தான். தனக்கென ஒரு வேலை இருக்கும் போது அதையெல்லாம் முடித்துவிட்டு தனக்கு பிடித்த ஒரு வேலையை மக்களுக்காகவே செய்து வரும் பிரதீப் ஜானுக்கு கொலை மிரட்டல் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என கண்டனம் தெரிவிக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

அவரது பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள ஒருவர், வானிலை அறிக்கை வெளியிடும் அளவுக்கு தகுதியில்லாதவர் பிரதீப். அவரைக் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். இவர் வானிலை ஆய்வு மையத்தின் மீது அவதூறு கிளப்புகிறார். அவரது பதிவுகள் பொய்யானவை. நிவர் பற்றி அவர் குறிப்பிட்டது எதுவும் நடக்கவில்லை என பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர் அநாகரிகமாகவும், உயிருக்கே அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் 'அடித்தே கொல்ல வேண்டும்' போன்ற கொடூர கமெண்ட்களும் பதிவிட்டுள்ளனர். சிலர் மத ரீதியாகவும், இல்லாத சில கதைகளையும் பதிவிட்டு மன உளைச்சலை கொடுக்கின்றனர்.

இது குறித்து பதிவிட்டுள்ள வெதமேன், நான் குறிப்பிடும் போதும், பேசும்போதெல்லாம் வானிலை ஆய்வு மையத்தை குறிப்பிட்டு சார்ந்து, ஆதரவாகத்தான் பேசுகிறேன். என்னுடைய பதிவை பின் தொடரவேண்டும் என யாரையுமே கேட்டுக்கொள்ளவில்லை. உங்களுக்கு என்னுடைய பதிவு பிடிக்கவில்லை என்றால் நகர்ந்து சென்றுவிடலாம். எனக்கான நேரத்தில் தான் வானிலை அறிக்கையை கொடுக்கிறேன். நான் ஒரு சாதாரண ஆள். இது எனக்கு பிடித்தமான வேலை. சில அநாகரீக பேச்சுகள் என் இதயத்தை நொறுக்குகிறது. சில கமெண்டுகள் வெறுப்பை உமிழ்கின்றன. என்னை கொலை செய்யவேண்டுமென சிலர் கூறுகிறார்கள் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

வெதர்மேனுக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். உங்கள் சேவையை தொடர்ந்து செய்யவேண்டுமென்றும், வெறுப்பை உமிழ்பவர்களை சட்ட ரீதியாக தண்டிக்க வேண்டுமென்றும் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே, வெதர்மேனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்பியுமான ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டரில், “‘தமிழ்நாடு வெதர்மேன்’ திரு ப்ரதீப் ஜானை மதரீதியில் அவதூறு செய்வதும், அவரைக் கொலைசெய்யவேண்டும் எனப் பதிவிட்டு வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் ஏற்புடையதல்ல. இதைத் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">‘தமிழ்நாடு வெதர்மேன்’ திரு ப்ரதீப் ஜானை மதரீதியில் அவதூறு செய்வதும், அவரைக் கொலைசெய்யவேண்டும் எனப் பதிவிட்டு வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் ஏற்புடையதல்ல. இதைத் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் <a href="https://t.co/vfk0AAWKkG">https://t.co/vfk0AAWKkG</a> <a href="https://t.co/gwUDpbCKW8">pic.twitter.com/gwUDpbCKW8</a></p>&mdash; Dr Ravikumar M P (@WriterRavikumar) <a href="https://twitter.com/WriterRavikumar/status/1333045219353272329?ref_src=twsrc%5Etfw">November 29, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>